மும்பையில் சரிந்து வரும் தொற்று பாதிப்பு; கொரோனா 2-வது அலையின் உச்சம் முடிவுக்கு வருகிறதா? நிபுணர்கள் கருத்து


மும்பையில் சரிந்து வரும் தொற்று பாதிப்பு; கொரோனா 2-வது அலையின் உச்சம் முடிவுக்கு வருகிறதா? நிபுணர்கள் கருத்து
x
தினத்தந்தி 26 April 2021 8:54 PM GMT (Updated: 26 April 2021 8:54 PM GMT)

மும்பையில் தொடர்ந்து சரிந்து வரும் கொரோனா பாதிப்பால் 2-வது அலையின் உச்சம் முடிவுக்கு வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

3-வது நாளாக குறைந்தது

மராட்டிய மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் 2-வது அலை புரட்டிப்போட்டு உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் பாதிப்பு அதிகமாக இருந்தது. நகாில் கடந்த 4-ந் தேதி 11 ஆயிரத்து 163 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதன்பிறகு நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்தது.குறிப்பாக கடந்த 3 நாட்களாக நகாில் நோய் பாதிப்பு சரிந்து உள்ளது. நகரில் கடந்த சனிக்கிழமை 5 ஆயிரத்து 888 பேருக்கும், நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 542 பேருக்கும் தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று பாதிப்பு 3 ஆயிரத்து 792 ஆக குறைந்து உள்ளது.

முடிவுக்கு வருகிறதா?

41 ஆயிரம் பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மும்பையில் 2-வது கொரோனா அலையின் உச்சம் முடிவுக்கு வரலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து மாநில கொரோனா தடுப்பு குழு உறுப்பினர் டாக்டர் சசாங் ஜோஷி டுவிட்டர் பதிவில், மும்பையில் ஒரு நாளில் 41 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்ட போதும் தொற்று பாதிப்பு 3 ஆயிரத்து 792 ஆக குறைந்து உள்ளது. இது ஏ.டி.எம்.(முன்கூட்டியே மதிப்பிடுதல், பரிமாற்றம் மற்றும் மேலாண்மை) திட்டத்துக்கு பலன் கிடைத்து இருப்பது தெளிவாகி உள்ளது என கூறியுள்ளார்.

உறுதியாக கூற முடியாது

மேலும் அவர், ‘‘மும்பையில் நோய் பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதால், 2-வது அலையின் உச்சம் முடிவுக்கு வந்து இருக்கலாம். முதல் கொரோனா அலையின் போது மும்பையில் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் சோதனைகள் தான் மேற்கொள்ளப்பட்டது. 2-வது அலையின் போது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா தடுப்புவிதிகளை பின்பற்ற வேண்டும். மோசமான நிலை முடிந்துவிட்டதாக நம்மால் கூறமுடியாது’’ என்றார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனது மனதின் குரல் உரையில் டாக்டர் சசாங் ஜோஷி குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் இதுவரை 6 லட்சத்து 31 ஆயிரத்து 527 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளர். இதில் 12 ஆயிரத்து 853 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று மட்டும் நகரில் மேலும் 70 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் தற்போது 62 நாட்களாக உள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக மும்பையில் நோய் பாதிப்பு குறைந்து இருப்பது பொதுமக்களுக்கு ஆறுதலை அளித்து உள்ளது.


Next Story