நாடு தழுவிய அளவில் நாளை மறுதினம் தர்ணா போராட்டம் - பாஜக அறிவிப்பு


நாடு தழுவிய அளவில் நாளை மறுதினம் தர்ணா போராட்டம் - பாஜக அறிவிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 5:02 PM GMT (Updated: 3 May 2021 5:02 PM GMT)

மேற்குவங்காளத்தில் தங்கள் தொண்டர்கள் மற்றும் அலுவலகங்களை குறிவைத்து திரிணாமுல் காங்கிரஸ் தாக்குதல் நடத்துவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது. 

ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரி பதவியேற்க உள்ளார். மம்தா பானர்ஜியின் பதவியேற்பு விழா மே 5-ம் தேதி (நாளை மறுதினம்) எந்தவித ஆடம்பரமின்றி எளிய முறையில் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசார் தேர்தலில் தோல்வியடைந்த பாஜகவினர் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று பாஜக அலுவலகங்கள், பாஜக ஆதரவாளர்களின் வீடுகளை குறிவைத்து திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த தாக்குதல் தொடர்பாக சமூகவலைதளங்களில் பல்வேறு வீடியோக்களும் வெளியாகின.

மேலும், தேர்தல் வெற்றிக்கு பின்னர் திரிணாமுல் காங்கிரசால் நடத்திய கொடூர தாக்குதலில் நேற்று மட்டும் தங்கள் கட்சி தொண்டர்கள் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. நூற்றுக்கணக்கான பாஜக அலுவலகங்களும், பாஜக தொண்டர்களின் வீடுகளும் திரிணாமுல் காங்கிரசாரால் சூரையாடப்பட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சியினர் மீது திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டதா? என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மேற்குவங்காள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தாக்குதல் விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய அளவில் வரும் 5-ம் தேதி (நாளை மறுதினம்) தர்ணா போரட்டம் நடைபெறும் என்று பாஜக தலைமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், மேற்குவங்காள தேர்தலுக்கு பின்னர் பாஜகவினரை குறிவைத்து திரிணாமுல் காங்கிரசாரால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களை கண்டித்து வரும் 5-ம் தேதி நாடு தழுவிய அளவில் பாஜக தர்ணா போராட்டத்தில் ஈடுபடும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனைத்து மண்டல பாஜக அலுவலகங்களிலும் இந்த போராட்டம் நடைபெறும். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இரண்டுநாள் பயணமாக நாளை மேற்குவங்காளம் செல்ல உள்ளார். அவர் அங்கு திரிணாமுல் காங்கிரசாரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக தொண்டர்களை சந்திக்க உள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story