கொரோனா தடுப்பூசி கேட்டு மிரட்டல்: சீரம் நிறுவன தலைவர் போலீசில் புகார் அளிக்க வேண்டும்; மராட்டிய அரசு வலியுறுத்தல்


கொரோனா தடுப்பூசி கேட்டு மிரட்டல்: சீரம் நிறுவன தலைவர் போலீசில் புகார் அளிக்க வேண்டும்; மராட்டிய அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 May 2021 9:19 PM GMT (Updated: 3 May 2021 9:19 PM GMT)

தடுப்பூசி விவகாரத்தில் மிரட்டல் வருவதாக சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியுள்ள நிலையில் அவர் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்றும், அது குறித்து ஆழமான விசாரணை நடதப்படும் என்றும் மராட்டிய அரசு கூறியுள்ளது.

தேவை அதிகரிப்பு

புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்.ஐ.ஐ.) நிறுவனம் இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் தடுப்பூசி தேவை அதிகரித்து உள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கவும் மாநில அரசுக்குகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசி வாங்கி கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்தநிலையில் தடுப்பூசி விவகாரத்தில் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலாவுக்கு இந்தியாவில் மிரட்டல் வருவதாக தகவல் வெளியானது.

மருந்து கேட்டு மிரட்டினர்

இந்தநிலையில் சமீபத்தில் அவர், ‘தி டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அதிகளவு தடுப்பு மருந்து கேட்டு இந்தியாவில் மிரட்டல் வந்ததாகவும், இதையடுத்து தானும், தனது குடும்பத்தினரும் லண்டன் சென்றதாக கூறியுள்ளார். மேலும் அவர் கொரோனா தடுப்பூசி கேட்டு அதிகளவில் அழுத்தம், அத்துமீறல்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசில் புகார் அளிக்கவேண்டும்

இந்தநிலையில் மிரட்டல் குறித்து ஆதாா் பூனாவாலா போலீசில் புகார் அளிக்க வேண்டும் என மராட்டிய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மாநில உள்துறை இணை மந்திரி சம்புராஜீ தேசாய் கூறுகையில், ‘‘பூனாவாலா தனக்கு வந்த மிரட்டல், மிரட்டல் வந்த தொலைபேசி எண் குறித்த விவரங்களுடன் போலீசில் புகார் அளிக்க வேண்டும். புகார் குறித்து நாங்கள் ஆழமான விசாரணை நடத்துவோம்’’ என்றார்.

இதேபோல காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே, ஆதார் பூனாவாலாவுக்கு காங்கிரஸ் கட்சி பாதுகாப்பு அளிக்கும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘மக்களின் உயிர் தான் முக்கியம். தடுப்பு மருந்து தயாரிப்பு இந்தியாவில் தான் நடக்க வேண்டும். மத்திய அரசு அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. தேவைப்பட்டால் அதிக பாதுகாப்பு கொடுக்கலாம்.

மேலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை காங்கிரசும் ஏற்று கொள்ளும். யாராலும் அவரை தொட முடியாது. அவர் நாடு திரும்பி, தொடர்ந்து மருந்து தயாரிப்பில் ஈடுபட வேண்டும்’’ என்றார்.


Next Story