இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3-வது நாளாக குறைவு


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3-வது நாளாக குறைவு
x
தினத்தந்தி 4 May 2021 4:16 AM GMT (Updated: 4 May 2021 4:16 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கம் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள்  கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டு மக்களை கதி கலங்க வைத்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  

இந்த நிலையில்,  சற்று ஆறுதல் தரும் வகையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது.  கடந்த சனிக்கிழமை 4.01 லட்சம், நேற்று முன் தினம் 3.92 லட்சம், நேற்று 3.68 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கவலை அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 289 ஆக உள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  2 கோடியே 02 லட்சத்து  82ஆயிரத்து 833- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,66,13,292- ஆக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 408- ஆக உள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 47ஆயிரத்து 133- ஆகும்.  நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 89 லட்சத்து  32 ஆயிரத்து 921-  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 

Next Story