திருமணத்திற்கு முந்தைய நாளில் கொரோனாவுக்கு மணமகன் பலி -கார்வார் அருகே சோகம்


திருமணத்திற்கு முந்தைய நாளில் கொரோனாவுக்கு மணமகன் பலி -கார்வார் அருகே சோகம்
x
தினத்தந்தி 4 May 2021 7:07 PM GMT (Updated: 4 May 2021 7:07 PM GMT)

கார்வார் அருகே திருமணத்திற்கு முந்தைய நாளில் மணமகன் கொரோனாவுக்கு பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

கார்வார்:
கார்வார் அருகே திருமணத்திற்கு முந்தைய நாளில் மணமகன் கொரோனாவுக்கு பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்
கர்நாடக மாநிலம், கார்வார் மாவட்டம் நந்தனகட்டா கிராமத்தை சேர்ந்தவர் ரோசன் பசவலகர் (வயது 32). இவர், மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ரோசனுக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அந்த இளம்பெண்ணுக்கும், ரோசனுக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. 
இதையடுத்து, ரோசன், இளம்பெண்ணின் திருமணத்தை மே 4-ந்தேதி (அதாவது நேற்று) நடத்த 2 குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மணமகள், மணமகன் வீட்டார் செய்து வந்திருந்தனர். தன்னுடைய திருமணத்திற்காக விடுமுறை எடுத்து கொண்டு புனேயில் இருந்து ரோசன், கார்வாருக்கு வந்திருந்தாா்.
கொரோனாவுக்கு பலி
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரோசனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. 
இதற்காக ரோசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ரோசனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறி வந்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் ரோசனுக்கு மூச்சு திணறல் உண்டானது.
இதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரோசன் பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் மணமகள் மற்றும் ரோசன் குடும்பத்தினர் தாங்க முடியாத வேதனையுடன் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 
திருமணத்திற்கு முந்தைய நாளில் மணமகன் உயிர் இழந்த சம்பவம் நந்தனகட்டா கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story