மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை - 16 பேர் பலி


மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை - 16 பேர் பலி
x
தினத்தந்தி 6 May 2021 10:48 AM GMT (Updated: 6 May 2021 10:48 AM GMT)

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது. 

ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

இதற்கிடையில், தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து பாஜக கட்சினர், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. 

தங்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி மேற்குவங்காள அரசுக்கு கடிதம் அனுப்பியது.

முதல் கடிதத்திற்கு மேற்குவங்காள அரசு பதிலளிக்காத நிலையில் இரண்டாவது முறை கடிதம் அனுப்பப்பட்டது. அந்த 2-வது கடிதத்திற்கும் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு தற்போது வரை பதிலளிக்கவில்லை. 

இதனை தொடர்ந்து 2-வது கடிதத்திற்கும் பதில் வரவில்லை என்றால் இந்த விவகாரம் மிகவும் கடுமையானதாக பார்க்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்று மம்தா அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பஷல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த வன்முறை தொடர்பாக களநிலவரத்தை ஆராய உள்துறை அமைச்சகத்தின் 4 பேர் கொண்ட குழு மேற்குவங்காளம் விரைந்துள்ளது.

இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான பாஜகவினரை சந்திக்க மத்திய மந்திரி முரளிதரன் இன்று மேற்குவங்காள மாநிலம் மிட்னாபூர் சென்றார். அப்போது அவர் சென்ற காரை மறித்த திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு கும்பல் அதன் மீது கற்கலை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பாஜக தலைவர்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து வன்முறையை தூண்ட முயற்சிக்கிறார்கள். புதிய அரசு ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரம் கூட ஆகவில்லை அதற்குள் அவர்கள் (மத்திய அரசு) கடிதங்கள் அனுப்புகின்றனர். குழுக்கள் மற்றும் தலைவர்கள் இங்கு வருகின்றனர். மக்கள் அளித்த தீர்ப்பை (திரிணாமுல் வெற்றி) அவர்கள் ஏற்க தயாராக இல்லை. மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவித பாகுபாடும் இன்றி தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். சட்டம் ஒழுங்கு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதி பேர் திரிணாமுல் காங்கிரசார், மீதி பாதி பேர் பாஜகவினர். சஞ்சுக்தா மோட்சா கட்சியை சேர்ந்த 1 நபரும் உயிரிழந்துள்ளார்’ என்றார்.

Next Story