ஒடிசாவை நெருங்குகிறது ‘யாஸ் புயல்’ - கனமழை கொட்டுகிறது


ஒடிசாவை நெருங்குகிறது  ‘யாஸ் புயல்’ -  கனமழை கொட்டுகிறது
x
தினத்தந்தி 26 May 2021 3:40 AM GMT (Updated: 26 May 2021 3:40 AM GMT)

அதிதீவிரம் அடைந்த ‘யாஸ்’ புயல் இன்று ஒடிசா, மேற்கு வங்காளத்துக்கு இடையே கரையை கடக்கிறது.

கொல்கத்தா,

கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று முன்தினம் இரவு மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. 

ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  யாஸ் என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயலால் மணிக்கு 165 கி.மீ. முதல் 185 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும். மேற்கு வங்காளத்தையும் புயல் கடந்து செல்ல உள்ளது.

புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.  புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இருமாநிலங்களும் எடுத்துள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 115 குழுவாக பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ராணுவமும் மீட்பு நடவடிக்கையில் இறங்க தயார் நிலையில் உள்ளது.  கொல்கத்தா விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இன்று இரவு 7.45 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story