1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று; இந்திய அளவில் தொடர்ந்து குறைகிறது கொரோனா பாதிப்பு; 2.76 லட்சம் பேர் குணம் அடைந்தனர்


1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று; இந்திய அளவில் தொடர்ந்து குறைகிறது கொரோனா பாதிப்பு; 2.76 லட்சம் பேர் குணம் அடைந்தனர்
x
தினத்தந்தி 30 May 2021 5:33 PM GMT (Updated: 30 May 2021 5:33 PM GMT)

நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 2.76 லட்சம் பேர் ஒரே நாளில் குணம் அடைந்தனர்.

3-வது நாளாக குறைவு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 29-ந்தேதியில் இருந்து தினமும் 2 லட்சத்துக்கு குறைவானோருக்குத்தான் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று 3-வது நாளாக தொற்று பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழே பதிவாகி இருப்பது கொரோனா இரண்டாவது அலை ஒருவழியாக கட்டுக்குள் வந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை அளிப்பதாக அமைந்துள்ளது.நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 553 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது 46 
நாட்களில் பதிவான குறைவான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கடந்த மாதம் 13-ந் தேதி 1 லட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 94 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பு தமிழகத்தில் (30 ஆயிரத்து 16) பதிவானது. கேரளாவில் 23 ஆயிரத்து 513 பேருக்கும், கர்நாடகத்தில் 20 ஆயிரத்து 628 பேருக்கும், மராட்டியத்தில் 20 ஆயிரத்து 295 பேருக்கும், ஆந்திராவில் 13 ஆயிரத்து 756 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு விகிதம் குறைவு
நேற்று முன்தினம் நாடு முழுவதும் 20 லட்சத்து 63 ஆயிரத்து 939 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் தான் 1 லட்சத்து 65 ஆயிரத்து 553 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.அந்த வகையில் பாதிப்பு விகிதம் 8.02 சதவீதமாக சரிந்துள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்குள் அடங்கி இருக்கிறது. வாராந்திர பாதிப்பு விகிதம் 9.36 சதவீதம் ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

மீட்பு தொடர்ந்து அதிகரிப்பு
கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீட்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வது நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது. நேற்று 17-வது நாளாக தினசரி பாதிப்பு அளவை விட மீட்பு அளவு அதிகமாக இருந்தது. 1 லட்சத்து 65 ஆயிரத்து 553 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 2 லட்சத்து 76 ஆயிரத்து 309 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இது வரை நாட்டில் மீட்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 54லட்சத்து 54 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதமும் 91.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதிகபட்ச எண்ணிக்கையாக 
நேற்று கர்நாடகத்தில் 42 ஆயிரத்து 443 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டார்கள். மராட்டியத்தில் 31 ஆயிரத்து 964 பேரும், தமிழகத்தில் 31 ஆயிரத்து 759 பேரும், கேரளாவில் 28 ஆயிரத்து 100 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

பலி சரிவு
இந்தியாவில் கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. நேற்று தொடர்ந்து 4-வது நாளாக இறப்பு 4 ஆயிரத்துக்குள் அடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 617 பேர் இறந்தனர். நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இது மேலும் குறைந்து 3,460 ஆனது. மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச எண்ணிக்கையாக மராட்டியத்தில் 832 பேர் பலியாகினர். கர்நாடகத்தில் 492 பேரும், தமிழகத்தில் 486 பேரும், கேரளாவில் 198 பேரும் உயிரிழந்தள்ளனர். கொரோனா உயிர்ப்பலி விகிதம் 1.17 சதவீதம் ஆக உள்ளது. அந்தமான் நிகோபார், தத்ராநகர்ஹவேலி டாமன் டையு, லடாக் ஆகியவை கொரோனா உயிரிழப்பில் இருந்து நேற்று தப்பி இருக்கின்றன.

சிகிச்சை பெறுவோர் குறைவு
நாட்டில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 216 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 21 லட்சத்து 14 ஆயிரத்து 508 பேர் சிகிச்சையில் இருந்தனர்.இதுமொத்த பாதிப்பில் 7.58 சதவீதம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. அதிகபட்சமாக கர்நாடகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 87 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story