மேற்கு வங்காளத்தில் 12.35 கிலோ போதை மாத்திரைகள் பறிமுதல்


மேற்கு வங்காளத்தில் 12.35 கிலோ போதை மாத்திரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Aug 2021 11:51 PM GMT (Updated: 16 Aug 2021 12:19 AM GMT)

மேற்கு வங்காளத்தில் ரூ.55 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் மேற்கு துறைமுக பகுதியில் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அதிக அளவில் மாத்திரைகள் இருந்தன. அவை யபா என்று அழைக்கப்படும் ஆம்பெடமைன் போதை மாத்திரைகள் என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2.29 கிலோ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களில் ஒருவர் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர் என்றும் மற்றொருவர் மணிப்பூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் விற்பனையில் அவர்களுடன் தொடர்புடைய மற்ற 2 விற்பனையாளர்கள் பற்றி போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, சனிக்கிழமை இரவு மால்டா மாவட்டம் கசோல் பகுதியில் மேலும் 2 போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்புள்ள 10.06 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story