

போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில், 45 வயது பெண் ஒருவரை, பலர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி, அடித்து உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று வைரலாக பரவியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது தார் மாவட்டத்தை சேர்ந்த மாண்ட்வி என்ற கிராமத்தில் கடந்த 5-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. அந்த பெண்ணின் தீய பார்வையால் அவரது உறவினர்கள் திடீர் நோய்களால் பாதிக்கப்பட்டு வந்தார்கள் என்ற மூடநம்பிக்கையில், அந்த பெண்ணின் உறவினர்களே அவரை நிர்வாணப்படுத்தி, முடியைப்பிடித்து இழுத்து அடித்து உதைத்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று குற்றவாளிகளில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.