வீர சாவர்க்கர் வெள்ளையர்களிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை சிவசேனா சொல்கிறது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 14 Oct 2021 6:17 AM GMT (Updated: 14 Oct 2021 6:17 AM GMT)

வீர சாவர்க்கர் வெள்ளையர்களிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை, 
வீர சாவர்க்கர் வெள்ளையர்களிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார். 
 ராஜ்நாத் சிங் பேச்சு
சுதந்திர போராட்ட வீரரான வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசியபோது, “வீர சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர், தீவிரமான தேசியவாதி. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் என்று தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் தான் ஆங்கிலேயே அரசுக்கு சாவர்க்கர் கருணை மனு எழுதினார். இது வரலாற்று உண்மை” என்று தெரிவித்தார். 
இந்தநிலையில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.யும் வீர சாவர்க்கரை நினைவு கூர்ந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மன்னிப்பு கேட்கவில்லை
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சுதந்திர போராளிகள் சிறையில் இருப்பதற்கு பதிலாக வெளியே வந்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்து சில யுத்தியை கடைபிடிப்பது உண்டு. வீர சாவர்க்கர் அத்தகைய யுத்தி ஒன்றை தான் கையாண்டார். அதை மன்னிப்பு என்று அழைக்க முடியாது. சாவர்க்கர் அப்படிப்பட்ட ஒன்றை செய்தார் என்பதால் அதை மன்னிப்பாக ஏற்க முடியாது. சாவர்க்கர் ஒருபோதும் வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.
நாங்கள் தொடர்ந்து சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறோம். சுதந்திர போராட்ட வீரரான அவர் இந்துத்வாவின் அடையாளம், எப்போதும் எங்கள் கட்சியின் தலைவராக விளங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். 
உள்ளாட்சி தேர்தல்
இதேபோல நடைபெற உள்ள மராட்டிய உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்து கூறிய அவர், “சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு அடுத்த ஆண்டு மாநகராட்சி தேர்தலில் வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்யும். புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட்டில் சிவசேனா தனது கட்சி மேயரை கொண்டுவரும், அதேபோல புனேவிலும் மேயரை பெறுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவோம்” என்றார். 
பிம்பிரி சிஞ்ச்வாட் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story