மும்பை சிறையில் மகனை சந்தித்தார் ஷாருக்கான்


மும்பை சிறையில் மகனை சந்தித்தார் ஷாருக்கான்
x
தினத்தந்தி 21 Oct 2021 4:43 AM GMT (Updated: 21 Oct 2021 4:43 AM GMT)

சிறையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக நடிகர் ஷாருக்கான் இன்று ஆர்தர் ரோடு சிறைக்குச் சென்றுள்ளார்.

மும்பை,

மும்பையில் இருந்து கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் நடுக்கடலில் வைத்து போதைப்பொருள் தடுப்பு அதிகரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்றது தெரியவந்தது. 

இந்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை விசாரித்த கோர்ட்டு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. 

இதையடுத்து ஆர்யன் கான், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி ஆர்யன் கான் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் தற்போது சிறையில் உள்ளார். 

இந்த நிலையில் சிறையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக நடிகர் ஷாருக்கான் இன்று ஆர்தர் ரோடு சிறைக்குச் சென்றுள்ளார். கடந்த 3 ஆம் தேதி ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஷாருக்கான் இன்று தன் மகனை நேரில் சந்தித்துள்ளார். கடந்த வாரம் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான் இருவரும் ஆர்யன் கானுடன் வீடியோ கால் மூலமாக பேசியிருந்தனர்.

கொரோனா சூழல் காரணமாக சிறையில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்கு இருந்த கட்டுப்பாடுகளை மராட்டிய அரசு நேற்றைய தினம் தளர்த்தியது. முன்னதாக சிறைக்கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டு நபர்கள் மட்டும் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story