நாட்டில் நல்ல மழை பெய்தால் 2023 சிறப்பான ஆண்டாக அமையும் - சரத்பவார்


நாட்டில் நல்ல மழை பெய்தால் 2023 சிறப்பான ஆண்டாக அமையும் - சரத்பவார்
x

நாட்டில் நல்ல மழை பெய்தால் 2023-ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும் என சரத்பவார் கூறினார்.

வாங்கும் திறன்

புதிய ஆண்டில் நாடு அடியெடுத்து வைத்த நிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய நாட்டில் 50 முதல் 60 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். எனவே விவசாயிகளுக்கு சாதகமாக பருவமழை நன்றாக பெய்தால், நம் அனைவருக்கும் வரும் ஆண்டு சிறப்பானதாக அமையும். விவசாயம் செழித்தால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். வரும் ஆண்டில் நாட்டின் விவசாயிகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால், மற்ற வணிகங்களும் ஏற்றம் காணும். அவர்களும் சிறந்த நாட்களை காணுவார்கள்.

புதிய சீர்திருத்தம்

ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முக்கியமான நாடாக மாற முடியும். எனவே இதற்காக தொழில் மற்றும் வர்த்தகத்தில் புதிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.

தற்போது யார் ஆட்சியில் இருந்தாலும், அரசியல் வேறுபாடுகளை களைந்து, பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை. இதனால் நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு ஜனவரி மாத இறுதியில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி இதுகுறித்து விவாதம் நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story