மினிலாரி மோதி அசாம் தொழிலாளர்கள் 3 பேர் சாவு


மினிலாரி மோதி அசாம் தொழிலாளர்கள் 3 பேர் சாவு
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:47 PM GMT)

அத்திபெலே அருகே மினிலாரி மோதி அசாம் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

ஆனேக்கல்:

3 பேர் சாவு

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே அருகே மாயசந்திரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த மினிலாரி ஒன்று அவர்கள் 3 பேர் மீதும் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் அத்திபெலே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அசாம் தொழிலாளர்கள்

பின்னர் போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அத்திபெலே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும் அசாமை சேர்ந்தவர்கள் என்பதும், கூலி தொழிலாளர்களான 3 பேரும் வேலையை முடித்துவிட்டு நடந்து தாங்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது.

ஆனால் அவர்களின் பெயர், மற்ற விவரங்கள் எதுவும் போலீசாருக்கு உடனடியாக கிடைக்கவில்லை. இதுபற்றி அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி நாராயண், அத்திபெலே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிலாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story