3 வயது குழந்தை பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை; தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு


3 வயது குழந்தை பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை; தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு
x

3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிக்கமகளூரு;

3 வயது குழந்தை பலாத்காரம்

தாவணகெரே புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ராமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 22). அதே பகுதியில் 3 வயது குழந்தை தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந்தேதி அந்த குழந்தை தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது, அங்கு வந்த சிவக்குமார் அந்த குழந்தையிடம் சாக்லெட் தருவதாக கூறி அருகில் இருந்த மாட்டு கொட்டகைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து குழந்தையை அவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் பயந்து போன சிறுமி கதறி அழுதுள்ளாள்.

போக்சோவில் கைது

இதையடுத்து அந்த குழந்தையை சிவக்குமார் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து அந்த சிறுமி தன் பெற்றோரிடம் கூறினாள். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இதுபற்றி தாவணகெரே புறநகர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த சிவக்குமாரை போலீசார் போக்ேசா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அந்த நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கபட்டார்.

20 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை தாவணகெரே கோர்ட்டில் நடத்து வந்தது. மேலும் சிவக்குமார் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நீதிபதி ஸ்ரீபாத் தீர்ப்பு வழங்கினார்.

அதில் சிவக்குமார் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் சிறையில் அடைக்கபட்டார். மேலும் பலாத்காரத்துக்குள்ளான குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.


Next Story