விற்பனை பிரதிநிதிகளுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு: கர்நாடக அரசு அறிவிப்பு


விற்பனை பிரதிநிதிகளுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு: கர்நாடக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:46 PM GMT)

கர்நாடகத்தில் விற்பனை பிரதிநிதிகளுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 'இ-காமர்ஸ்' நிறுவனங்களில் பணியாற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு (டெலிவரி பாய்கள்) காப்பீடு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் உணவு, பிற பொருட்களை வாகனங்களில் எடுத்து வந்து வீடுகளில் கொடுக்கும் விற்பனை பிரதிநிதிகளுக்காக இந்த காப்பீடு திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பட்ஜெட்டிலும் இந்த காப்பீடு திட்டம் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படி, ஆன்லைன் விற்பனை பிரதிநிதிகளுக்கான காப்பீடு திட்டத்தை கர்நாடக அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த காப்பீடு திட்டம் மூலமாக விற்பனை பிரதிநிதிகளுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு கிடைக்கும்.

அதாவது விற்பனை பிரதிநிதிகள் விபத்தில் உயிரிழந்தால் ரூ.2 லட்சமும், இந்த காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர்கள் உயிரிழந்த பின்பு ரூ.2 லட்சமும் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தற்போது பணியாற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு இந்த காப்பீடு திட்டம் பொருந்தும். காப்பீடு திட்டத்தில் இணையும் விற்பனை பிரதிநிதிகள் கர்நாடகத்தில் பணியாற்ற வேண்டியது கட்டாயமாகும்.

18 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் அரசின் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அவர்கள் முறையாக விண்ணப்பித்து அரசிடம் இருந்து காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. ரூ.4 லட்சத்திற்கான காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியதற்காக கர்நாடக அரசுக்கு விற்பனை பிரதிநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Next Story