துமகூரு, பெலகாவியில் நடந்த விபத்துகளில் தந்தை-மகள்கள் உள்பட 5 பேர் சாவு


துமகூரு, பெலகாவியில் நடந்த விபத்துகளில்  தந்தை-மகள்கள் உள்பட 5 பேர் சாவு
x

துமகூரு, பெலகாவியில் நடந்த விபத்துகளில் தந்தை-மகள்கள் உள்பட 5 பேர் பலியானார்கள்.

துமகூரு: துமகூரு, பெலகாவியில் நடந்த விபத்துகளில் தந்தை-மகள்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.

3 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா தரூர் கேட் பகுதியில் நேற்று ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, காரின் மீது மோதியது. இந்த விபத்தில் கார் உருக்குலைந்தது. விபத்து பற்றி அறிந்ததும் கல்லம்பெல்லா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கி 2 சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெயர்கள் அவினாஷ் (வயது 28), அவரது மகள்கள் பிரணந்தி (5), சவுபாக்யா (3) என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்கள் பெயர்கள் தெரியவில்லை.

மாணவரின் கால் சிக்கியது

இதுபோல பெலகாவி மாவட்டம் அதானி புறநகர் மீரஜ் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு சொந்தமான வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டு இருந்தது. கல்லூரி அருகே வேன் சென்றபோது அந்த வழியாக வந்த கேன்டர் லாரியும், வேனும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பள்ளி வேன், கேன்டர் லாரி டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். வேனின் இடிபாடுகளில் ஒரு மாணவரின் கால் சிக்கி கொண்டது. அவரை நீண்ட நேரம் போராடி போலீசார் மீட்டனர். இந்த விபத்துகள் குறித்து கல்லம்பெல்லா, அதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story