தெலுங்கானா: அரசு பள்ளி மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம்


தெலுங்கானா: அரசு பள்ளி மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம்
x

image courtesy: ANI

தெலுங்கானா அரசு பள்ளி விடுதி ஒன்றில் காலை உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா,

தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு கஸ்தூரிபா பள்ளி விடுதியில் நேற்று காலை உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாராயண்கேட் வருவாய் கோட்ட அலுவலர், அம்பாதாஸ் ராஜேஷ்வர் கூறுகையில், அரசு கஸ்தூரிபா பெண்கள் விடுதியில் மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் காலையில் போஹாவை காலை உணவாக சாப்பிட்டனர்.

சில மாணவிகள் காலை உணவில் புழுக்கள் இருந்ததாக கூறியுள்ளனர். சுமார் 50 மாணவிகள் வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உடனடியாக மாணவிகள் நாராயண்கேட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மாணவிகள் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். ஊழியர்கள் யாரேனும் குற்றவாளி என கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். எம்எல்ஏ மற்றும் மாவட்ட கலெக்டர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.


Next Story