எல்லை வன்முறையில் 6 பேர் பலி; அமித்ஷாவை சந்தித்து பேச மேகாலயா முதல்-மந்திரி முடிவு


எல்லை வன்முறையில் 6 பேர் பலி; அமித்ஷாவை சந்தித்து பேச மேகாலயா முதல்-மந்திரி முடிவு
x

அசாம் மற்றும் மேகாலயா எல்லை வன்முறை தொடர்பாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மா முடிவு செய்துள்ளார்.



கவுகாத்தி,


வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம் ஆகியவற்றுக்கு இடையே அவ்வப்போது எல்லை பகுதியில் வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதுண்டு. இந்த நிலையில், அசாம் மற்றும் மேகாலயா இடையே, மேற்கு ஜைந்தியா மலைப்பகுதியில் முக்ரோ என்ற இடம் இரு மாநில எல்லையாக உள்ளது.

இந்த பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. இதனால், இரு மாநிலங்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், அசாம் வன அதிகாரி ஒருவர் மற்றும் பொதுமக்களில் 5 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேகாலயாவின் 7 மாவட்டங்களில் கடந்த 22-ந்தேதி காலை முதல் மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது.

மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மா துப்பாக்கி சூடு, உயிரிழப்பு சம்பவங்களை உறுதிப்படுத்தினார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணை நடந்து வருகிறது. எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது என அவர் கூறினார்.

வாட்ஸ்அப், சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படாமல் தடுக்கும் வகையில், மேற்கு ஜெயிந்தியா மலைகள், கிழக்கு ஜெயிந்தியா மலைகள், கிழக்கு காசி மலைகள், ரி-போய், கிழக்கு மேற்கு காசி மலைகள், மேற்கு காசி மலைகள் மற்றும் தென்மேற்கு காசி மலைகள் ஆகிய மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

இந்த சம்பவம் எதிரொலியாக, அசாம் மற்றும் பிற மாநில பயணிகளுடன் வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாமின் கச்சார் பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்கின்றனர்.

அதன்பின்பு மேகாலயாவுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மேகாலயா வாகன எண் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று எஸ்.பி. நுமல் மஹத்தா கூறியுள்ளார்.

இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா கூறும்போது, நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டு, சி.பி.ஐ.க்கு பரிந்துரைத்து உள்ளோம். எஸ்.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். உள்ளூர் போலீசார், வன துறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவது என்று அசாம் மற்றும் மேகாலயா அரசு முடிவு செய்துள்ளது.

அசாம் மற்றும் மேகாலயா எல்லையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மா முடிவு செய்துள்ளார். அவரது தலைமையிலான அமைச்சரவையினர் மந்திரி அமித்ஷாவை இன்று சந்தித்து பேச இருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. அல்லது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனினும், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா கூறும்போது, தேசிய ஊடகங்களில் வெளிவந்த செய்தியை போன்று, எல்லை விவகாரம் ஒன்றும் ஏற்படவில்லை. வனப்பகுதியில் மரக்கட்டைகள் தொடர்புடைய போலீசார் மற்றும் கிராமவாசிகள் இடையே ஏற்பட்ட மோதலே வன்முறைக்கு காரணம் என கூறியுள்ளார். இதுபற்றிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story