6 பேர் உயிரிழப்பால் பதற்றம்: அசாம்-மேகாலயா எல்லையில் தொடர்ந்து போலீஸ் குவிப்பு

6 பேர் உயிரிழப்பால் பதற்றம்: அசாம்-மேகாலயா எல்லையில் தொடர்ந்து போலீஸ் குவிப்பு

6 பேர் உயிரிழப்பால் பதற்றம் நிலவுவதால் அசாம்-மேகாலயா எல்லையில் தொடர்ந்து போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறது.
Published on

கவுகாத்தி,

அசாம்-மேகாலயா இடையே தொடர்ந்து எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதில் கடந்த 22-ந்தேதி அதிகாலையில் அசாமின் கர்பி அங்லாங் எல்லையில் உள்ள முக்ரோ கிராமத்தில் திடீரென மோதல் வெடித்தது.

இதைத்தொடர்ந்து நடந்த வன்முறையில் மேகாலயாவை சேர்ந்த 5 பழங்குடியினர் மற்றும் அசாமின் வனத்துறை அதிகாரி ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு மாநிலங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

அசாமின் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளான ஜோராபட், சாச்சார் மாவட்டங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இரு மாநில மக்களும் பரஸ்பரம் சென்றுவர பயணத்தடை விதிக்கப்பட்டு இருந்தது. 6 நாட்களாக நீடித்து வந்த இந்த தடையை நேற்று மாலையில் அசாம் அரசு விலக்கிக்கொண்டது.

அசாம் வாகனங்கள் குறிப்பாக சரக்கு வாகனங்கள் மேகாலயாவுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டது. எனினும் தேவைப்படும் இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் சென்று வர அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com