கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வலியுறுத்தல்


கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வலியுறுத்தல்
x

கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று மந்தரி சுதாகர் வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

24 பேர் கொரோனாவுக்கு மரணம்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து நிபுணர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன். கர்நாடகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு 7.2 சதவீதமாக உள்ளது. கடந்த 1-ந் தேதியில் இருந்து 10-ந் தேதி வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளான 24 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள், டாக்டர்களின் அறிவுரைப்படி கண்டிப்பாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

டெல்லிக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு சதவீதம் 7.2 சதவீதமாக இருக்கிறது. மாநிலத்தில் தினமும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. மாநிலத்தில் முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசியை பெரும்பாலானோர் செலுத்தி கொண்டுள்ளனர்.

கட்டாயம் போட வேண்டும்

ஆனால் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். மாநிலத்தில் 17 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். எனவே கொரோனா விவகாரத்தில் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முககவசம் அணிவது, பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்வது கட்டாயமாகும். மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story