திருச்சூர் அருகே பயங்கரம்: குழந்தை பிறந்த சில நாளில் மனைவி வெட்டிக் கொலை - கணவருக்கு வலைவீச்சு


திருச்சூர் அருகே பயங்கரம்: குழந்தை பிறந்த சில நாளில் மனைவி வெட்டிக் கொலை - கணவருக்கு வலைவீச்சு
x

திருச்சூர் அருகே இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாலக்காடு:

திருச்சூர் அருகே உள்ள மாள மங்களத்து பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிப் (வயது 31). இவரது மனைவி ஆஷிதா (25). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதை ஒட்டி பிரசவத்திற்காக முகமது ஆசிப் தனது மனைவியை தந்தை நூர்தீன் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார். அங்கு கடந்த 16 நாட்களுக்கு முன்பு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மாமனார் வீட்டில் இருந்த மனைவியையும் குழந்தையையும் 16 நாள் ஆகியும் கணவன் பார்க்க செல்லவில்லை.

நேற்று மாலை 5 மணி அளவில் மனைவியை மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு முகமது ஆசிப் மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தையை பார்த்துவிட்டு மனைவியுடன் பேசினார். சிறிது நேரத்தில் அங்கு இருந்த வாளை எடுத்து முகமது ஆசிப், திடீரென மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.

வெட்டு விழுந்ததில் ஆஷிதா ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். மகளின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தார்கள். அங்கு மகள் வெட்டப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து கீழே கிடந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்ததோடு உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆஷிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறிந்ததும் திருச்சூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், தப்பிஓடிய முகமது ஆசிப்பை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெண் குழந்தை பிறந்த 16-வது நாளில் தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story