சாலையோரம் நின்ற ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து


சாலையோரம் நின்ற ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:46 PM GMT)

எச்.டி.கோட்டை அருகே சாலையோரம் நின்ற ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிழந்தாா்.

எச்.டி.கோட்டை

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மானந்தவாடி ரோடு பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் (வயது19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை தனது தங்கை யசஸ்வினியுடன் சரமள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் கொண்டாட யஷ்வந்த் முடிவு செய்தார். அதன்படி, அவர்கள் 2 பேரும் ஸ்கூட்டரில் சிரமள்ளி கிராமத்திற்கு சென்றனர்.

அங்கு பண்டிகையை அவர்கள் கொண்டாடினர். பின்னர் அங்கிருந்து யசஸ்வினி, யஷ்வந்த்ஆகிய 2 பேரும் ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மைசூரு- மானந்தவாடி சாலை கைமரம் அருகே உள்ள ஓட்டல் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு 2 பேரும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தி இருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் யசஸ்வினி, யஷ்வந்த் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கடேஷ், சசி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எச்.டி.கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யஷ்வந்த் பரிதாபமாக இறந்தார்.

மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கைமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story