ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 29 March 2023 5:00 AM GMT (Updated: 29 March 2023 5:02 AM GMT)

மங்களூருவில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை மற்றும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

மங்களூரு-

மங்களூருவில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை மற்றும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பயங்கர தீ விபத்து

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் அடையாறு பகுதியில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை உள்ளது. மேலும் இந்த தொழிற்சாலை அருகே ஐஸ்கிரீம் சேமித்து வைக்கும் குடோனும் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று அந்த தொழிற்சாலையில் இருந்து கரும்புகை ெவளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது தொழிற்சாலையில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ, மளமளவென தொழிற்சாலை மற்றும் குேடான் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் குடோன் முன்பு நின்ற 2 லாரிகளிலும் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரூ.4 கோடி பொருட்கள் நாசம்

அதன்பேரில் 4 வாகனங்களில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தொழிற்சாலை, குடோன் மற்றும் லாரிகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தொழிற்சாலை, குடோன் மற்றும் லாரியில் பிடித்து எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

ஆனாலும் அதற்குள் 2 லாரிகளும் எரிந்து நாசமானது. மேலும், குடோனில் இருந்த ஐஸ்கிரீம் மற்றும் அதனை சேமித்து வைக்கும் எந்திரங்களும் எரிந்து நாசமானது. ஒட்டுமொத்தமாக ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது தெரியவந்தது.

மின்கசிவு காரணமாக..

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மங்களூரு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story