

சிக்கமகளூரு;
சிக்கமகளூரு தாசில்தார் விநாயக் சாகரை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:-
சிக்கமகளூரு தாலுகா அலுவலகத்திற்கு தினந்தோறும் சொந்த வேலையாக நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏழை, நடுத்தர மக்கள் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக வருகின்றனர்.
அப்படி வருபவர்களிடம் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கின்றனர். இதனால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதனை கருத்தில் கொண்டு தாலுகா அலுவலகத்தில் 'பார்க்கிங்' கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை பெற்றுகொண்ட தாசில்தார் விநாயக் சாகர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.