பாகல்கோட்டை அருகே டிராக்டர்கள் மோதல்; 3 பேர் சாவு


பாகல்கோட்டை அருகே டிராக்டர்கள் மோதல்; 3 பேர் சாவு
x

பாகல்கோட்டை அருகே டிராக்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் ௩ பேர் பலியானார்கள்.

பாகல்கோட்டை:

பாகல்கோட்டை மாவட்டம் பணஹட்டி அருகே நவலகி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், பெலகாவி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சவதத்தி எல்லம்மா கோவில் திருவிழாவில் பங்கேற்க டிராக்டர்களில் சென்றிருந்தனர். திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து டிராக்டரில், கிராம மக்கள் பெலகாவியில் இருந்து பாகல்கோட்டைக்கு புறப்பட்டனர். நேற்று காலையில் பாகல்கோட்டை மாவட்டம் முதோல் பகுதியில் வரும் போது 2 டிராக்டர்கள் மோதிக் கொண்டன. ஒரு டிராக்டர் மோதியதில், மற்றொரு டிராக்டர் அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் பல்டி அடித்து கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 3 பேர் டிராக்டருக்கு அடியில் சிக்கி பலியானார்கள். மேலும் சிலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும் முதோல் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது டிராக்டர் டிரைவர்கள் அலட்சியமாகவும், வேகமாகவும் போட்டி போட்டபடி டிராக்டரை ஓட்டி வந்ததால், விபத்து நடந்தது தெரியவந்தது. பலியானவர்கள் நவலகி கிராமத்தை சேர்ந்த கோவிந்தப்பா, அனுமந்தப்பா, சதாசிவா என்பதும், கிராமத்திற்கு திரும்ப 15 நிமிடங்களே இருந்த நிலையில் விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து முதோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story