நடிகை ராஷ்மிகா போலி வீடியோ விவகாரம்; டெல்லி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்


நடிகை ராஷ்மிகா போலி வீடியோ விவகாரம்; டெல்லி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
x

டெல்லி காவல்துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று அண்மையில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவானது இங்கிலாந்து வாழ் இந்தியப் பெண்மணியான ஜாரா படேல் என்பவர் கடந்த அக்டோபர் 9-ந்தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஆகும். அதில் நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வைத்து போலி வீடியோவை உருவாக்கியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த போலி வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல் இந்தி நடிகை கத்ரீனாவின் போலி வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த போலி வீடியோக்களை தயாரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மல்லிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story