மேற்கு வங்காளத்தில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து ஆதிவாசிகள் போஸ்டர்


மேற்கு வங்காளத்தில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து ஆதிவாசிகள் போஸ்டர்
x

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் ஆதிவாசிகளாகிய எங்களை கவுரவப்படுத்தி உள்ளனர் என முன்னாள் பா.ஜ.க. எம்.பி. கூறியுள்ளார்.



கொல்கத்தா,



ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடையும் சூழலில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18ந்தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இதனையடுத்து இருவரும் மாநிலம்தோறும் சென்று ஆதரவு திரட்டினர்.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் திரவுபதி முர்மு (வயது 64). இதன்பின்னர் ஒடிசா அரசியலில் நுழைந்து, மயூர்பஞ்சின் ராய்ரங்பூர் பகுதியின் கவுன்சிலரானார். பா.ஜ.க.வில் இணைந்து 2000 மற்றும் 2004ம் ஆண்டுகளில் 2 முறை எம்.எல்.ஏ.வானார். ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின்போது மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறையின் மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர்.

அவர், 1997ம் ஆண்டு பா.ஜ.க.வின் எஸ்.டி. மோர்ச்சா மாநில துணை தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றவர். ஜார்க்கண்டில் 5 ஆண்டுகள் பதவி காலம் (2015 முதல் 2021 வரை) முழுவதும் நிறைவு செய்த முதல் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றவர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் அல்புர்துவார் பகுதியை சேர்ந்த ஆதிவாசிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான போஸ்டர்களை அந்த பகுதியில் ஒட்டியுள்ளனர்.

இதுபற்றி பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான தசரத திர்கி கூறும்போது, இது எங்களுக்கு பெருமையளிக்கும் விசயம். முதன்முறையாக ஆதிவாசி பெண் ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் நட்டா ஆகியோர் எங்களை கவுரவப்படுத்தி உள்ளனர் என்று கூறியுள்ளார்.


Next Story