அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் ; இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட்டு


அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் ; இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும்-  சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 23 Feb 2023 5:13 AM GMT (Updated: 23 Feb 2023 8:07 AM GMT)

ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது

அ.தி.மு.க. பொதுக் குழு வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும், என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்டு. சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவை உறுதி செய்கிறோம். என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமானது.

ஜூலை 11 அ.தி.மு.க. பொதுக்குழு: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் முழுவிவரம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில், தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.

கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.

தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே தவிர, 1.50 கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல எனவும் சுட்டிக்காட்டினர்.

பன்னீர்செல்வம் தரப்பில், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்றும்,கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமேபொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாதது எனவும் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 25ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் எடப்பாடி பழனிசாமி ஜூலை 11 கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து என்றும் சென்னை ஐகோர்ட் தீரப்பளித்துள்ளது.

தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறியதாவது:-

பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு அதிமுக சட்ட விதிகளின் படி மட்டுமே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும். ஒற்றை தலைமையின் நோக்கம் மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளது.

அதிமுக சட்ட விதிகளின் படி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்ற வாதம் ஏற்கப்பட்டது என கூறினார்.

வழக்கின் விவரம்

புதுடெல்லி

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஐகோர்ட்டில் அமர்வில் முறையிட்டது.

இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டது. இதன்பின்னர் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்பேரில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று கூறுகிறது. தீர்ப்பை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறுகிறார்.

ஏற்கனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக கிடைத்து விட்டது. இதனால் அந்த அணி உற்சாகத்தில் உள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இந்த தீர்ப்பை இரு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

அதிமுக ஜூன் 23 பொதுக்குழுவில் நடந்தது என்ன?

ஜூன் 23 அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மேடையில் அமர்ந்தனர். அப்போது தமிழ் மகன் உசேன், அதிமுக அவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுவதற்கு வந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மைக்கை பிடுங்கி, அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கூறினார்.

அதேபோல கேபி முனுசாமியும் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாகவும் கூறினார்.

இதே கேபி முனுசாமி முன்னர் ஓபிஎஸ் அணியில் இருந்தவர். அதிமுகவினருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை செம்மலை வாசித்தார்.

அப்பொதுக்குழு நடைபெற்று கொண்டிருக்கும் போது, 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துடனான ஒரு கடிதத்தை புதிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் சிவி சண்முகம் கொடுத்தார்.

இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து வலிமையாக போராட முடியவில்லை; அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்பதையே பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்; அந்த கையெழுத்துதான் தமிழ் மகன் உசேனிடம் கொடுக்கப்பட்டது என்றார் சிவி சண்முகம்.

பின்னர் பேசிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ஜூலை 11ந் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார். அப்போது ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அத்துடன், இந்த பொதுக்குழு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினர்.

மேடையில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஓபிஎஸ் மீது கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.பின்னர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைதான் தேவை என வலியுறுத்தி வேலுமணி உள்ளிட்டோர் பேசினர். இதுதான் அதிமுகவின் புதிய கலகத்துக்கு அடிப்படையாக அமைந்த 2021-ம் ஆண்டு ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள்.


Next Story