சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சமுத்ராயன்..! கடலடி ஆய்வுக்கு தயார் நிலையில் 'மத்ஸ்யா 6000'


சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சமுத்ராயன்..! கடலடி ஆய்வுக்கு தயார் நிலையில் மத்ஸ்யா 6000
x

'மத்ஸ்யா 6000' வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்து உருவாக்கி உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்து வரும் இந்தியா, நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்யக்கூடிய 'சந்திரயான்-3' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதன்பின் சூரிய கதிர்களை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக சூரியனை நோக்கி பயணிக்கிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து உலக நாடுகளை திரும்பி பார்க்கச் செய்யும் மற்றொரு ஆய்வுக்கு தயாராகி வருகிறது இந்தியா. இந்த முறை கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக 'மத்ஸ்யா 6000' என்ற நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தை சுமார் 6 கிலோ மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் சமுத்ராயன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த வாகனத்தில் மூன்று ஆய்வாளர்கள் அனுப்பப்பட உள்ளனர்.

'மத்ஸ்யா 6000' வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓடி) வடிவமைத்து உருவாக்கி உள்ளது. வாகனத்தின் வடிவமைப்பு நிறைவடைந்து, சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆராய்வதற்காக கடலுக்கடியில் தோண்டக்கூடிய சுரங்க இயந்திரம் மற்றும் ஆளில்லா வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சமுத்ராயன் திட்டப் பணிகள் மற்றும் ஆய்வு கலனை, மத்திய புவி அறிவியல் துறை மந்திரி கிரண் ரிஜிஜு சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

அப்போது, நிலையான கடல் வளங்களை பயன்படுத்தி அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் 'சமுத்ராயன்' திட்டம் கவனம் செலுத்துகிறது என கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அடுத்து சமுத்ராயன் திட்டம். இது 'மத்ஸ்யா 6000' நீர்மூழ்கிக் கலன். சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காக, 6 கி.மீ. கடல் ஆழத்திற்கு 3 மனிதர்களை இந்த நீர்மூழ்கி வாகனத்தில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஆழ்கடல் ஆய்வுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் இதுவாகும். இந்த திட்டம் கடல் சூழலை சீர்குலைக்காது. இந்த திட்டம் பிரதமரின் நீலப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

7517 கிலோ மீட்டர் அளவுக்கு மிக நீண்ட கடற்பரப்பைக் கொண்டிருக்கும் இந்தியா, கடற்கரையோரம் 9 மாநிலங்களையும் 1,382 தீவுகளையும் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் மூன்று பக்கங்களும் பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ளன. நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 30% மக்கள் கடலோரப் பகுதிகளிலும் கடலோரப் பிராந்தியங்களிலும் வாழ்கின்றனர். இது மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு, சுற்றுலா, வாழ்வாதாரம் மற்றும் நீல வணிகத்திற்கு மிகவும் ஆதரவாக இருக்கிறது.


Next Story