ஊழல், குடும்ப அரசியலை நடத்தும் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள்; மண்டியாவில் உள்துறை மந்திரி அமித்ஷா கடும் தாக்கு


ஊழல், குடும்ப அரசியலை நடத்தும் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள்; மண்டியாவில் உள்துறை மந்திரி அமித்ஷா கடும் தாக்கு
x

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் ஊழல், குடும்ப அரசியலை நடத்துவதாக உள்துறை மந்திரி அமித்ஷா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் ஊழல், குடும்ப அரசியலை நடத்துவதாக உள்துறை மந்திரி அமித்ஷா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

குடும்ப அரசியல்

மண்டியா மாவட்ட பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை-கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

மண்டியா, மைசூரு மண்டலத்தில் ஜனதா தளம் (எஸ்) -காங்கிரஸ், கட்சிகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தது போதும். இந்த முறை பா.ஜனதாவை நீங்கள் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன. அந்த கட்சிகள் ஊழல் கொள்ளையை நடத்துகின்றன.

இரட்டை என்ஜின் அரசு

இந்த 2 கட்சிகளின் ஆட்சியையும் நாங்கள் பார்த்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது டெல்லியின் ஏ.டி.எம். ஆக செயல்படும். ஜனதா தளம் (எஸ்) ஆட்சி செய்தால், அது ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக இருக்கும். இந்த 2 கட்சிகளும் ஊழல்கள் மூலம் கர்நாடகத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன. அதனால் ஊழல், குடும்ப அரசியலில் இருந்து கர்நாடகத்தை விடுவிக்க வேண்டும்.

கர்நாடகத்தில் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்ய பா.ஜனதாவுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் இரட்டை என்ஜின் அரசை கொண்டு வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் கர்நாடகத்தை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வோம். காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ஊழல், மதவாத அரசியல் செய்கின்றன. மேலும் குற்றம் செய்வோரை பாதுகாக்கின்றன.

25 தொகுதிகளில் வெற்றி

கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தோ்தலின்போது, நான் முதலில் மண்டியாவில் இருந்து தான் பிரசாரத்தை தொடங்கினேன். அப்போது பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக வந்தது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 52 சதவீத வாக்குகளை பெற்றது. அதில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

எடியூரப்பா

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். பா.ஜனதாவின் மூத்த தலைவரான எடியூரப்பா சிங்கப்பூர் சென்றுவிட்டதால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பா.ஜனதாவில் மக்கள் செல்வாக்கு படைத்த தலைவராக உள்ள எடியூரப்பா இதில் கலந்து கொள்ளாதது, தொண்டர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் பா.ஜனதா மேலிட தலைவர்கள் கர்நாடகத்தின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். உள்துறை மந்திரி அமித்ஷா தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். பிரதமர் மோடி ஜனவரியில் கர்நாடகம் வருகிறார். இனி பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி கர்நாடகம் வந்து கட்சி கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story