"ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்"... நடனம் ஆடிய கலைஞர் மேடையிலேயே உயிரிழந்த பரிதாபம்...!


ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்... நடனம் ஆடிய கலைஞர் மேடையிலேயே உயிரிழந்த பரிதாபம்...!
x

ஜம்மு காஷ்மீரில் மேடையில் உற்சாகமாக நடனம் ஆடிய கலைஞர் திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் பிஷ்னா பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், யோகேஷ் குப்தா என்ற கலைஞர் பார்வதி வேடமிட்டு நடித்தார். மேடையில் உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருந்த அவர், திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

'ஊருக்காக ஆடும் கலைஞர் தன்னை மறப்பான்' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அவர் கீழே விழுந்து சரியும் வரை நடனமாடி இருக்கிறார். ஒரு கட்டத்தில் பாடல் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அவரால் நடனமாட முடயவில்லை. அவருடன் சிவன் வேடம் அணிந்து நடனம் ஆடிக் கொண்டிருந்த மற்றொரு கலைஞர் விரைந்து வந்து, பார்வையாளர்களை உதவிக்கு அழைத்த போது அனைவரும் இது நடனத்தின் ஒரு பகுதி என்று நினைத்துள்ளனர். யாரும் மேடைக்கு வரவில்லை.

பின்னர் சக கலைஞர்கள் யோகேஷ் குப்தாவை தூக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறினர். நடனம் ஆடி கொண்டிருந்த போது மேடையிலேயே நடன கலைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story