இந்தியா கூட்டணிக்கு அடி மேல் அடி... தனித்து போட்டியிடுவதாக மேலும் ஒரு கட்சி அறிவிப்பு


இந்தியா கூட்டணிக்கு அடி மேல் அடி... தனித்து போட்டியிடுவதாக மேலும் ஒரு கட்சி அறிவிப்பு
x

இந்தியா கூட்டணியுடன் தேர்தல் பங்கீடு இல்லையென பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள், பீகார் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் முக்கிய தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

இந்நிலையில் இந்தியா கூட்டணிக்கு அடுத்த பின்னடைவாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா வருகின்ற மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணியுடன் தேர்தல் பங்கீடு இல்லையெனவும் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, தேசிய மாநாடு தனது சொந்த பலத்தில் தேர்தலில் போட்டியிடும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதில் இருவேறு கருத்துகள் இல்லை. இதைப் பற்றி இனி எந்த கேள்வியும் இருக்கக்கூடாது' என கூறியுள்ளார்.


Next Story