மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா...? சுப்ரீம் கோர்ட்டு கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் தரப்பு பதில்


மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா...? சுப்ரீம் கோர்ட்டு கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் தரப்பு பதில்
x

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருந்ததாகத் தனது மனுவில் ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.

புதுடெல்லி

அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பு முறையிட்டது. இதற்கிடையே இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழுவை நடத்தவில்லை என்றால் சுப்ரீம்கோர்ட் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் பரிசீலிக்க முடியுமே தவிர ஐகோர்ட்டு அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் சார்பில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருந்ததாகத் தனது மனுவில் ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இதற்கு வாய்ப்பில்லை என இரு தரப்பிலும் பதில் அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக மொத்தம் எத்தனை வழக்குகள் பதிவு செய்துள்ளீர்கள் என்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கடந்த 11ஆம்தேதி பொதுக்குழுவில் என்ன நடந்தது? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல முடிவுகள் பொதுக் குழுவில் எடுக்கப்பட்டன என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story