'தி காஷ்மீர் பைல்ஸ்' விவகாரம்: இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - இஸ்ரேல் தூதர்


தி காஷ்மீர் பைல்ஸ் விவகாரம்: இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - இஸ்ரேல் தூதர்
x
தினத்தந்தி 29 Nov 2022 6:16 AM GMT (Updated: 29 Nov 2022 6:16 AM GMT)

கோவாவில் 53-வது இந்திய - சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பனாஜி,

கோவா தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய-சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய - சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வுக்குழு தலைவர் நடவ் லபிட் பேசினார்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குனர்/தயாரிப்பாளரான நடவ் லபிட் பேசுகையில், 'தி காஷ்மீர் பைல்ஸ்' பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம்' என்றார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலை சேர்ந்த நடவ் லபிட் தெரிவித்த கருத்துக்கு இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவ்ர் கிலொன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலோன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி காஷ்மீர் பைல்ஸ் குறித்து விமர்சனம் செய்த நடவ் லபிட்டிற்கு ஒரு திறந்த மடல் இது. நடவ் லைபிட் நீங்கள் வெட்கப்படவேண்டும் ஏனென்றால்,

இந்திய கலாசாரத்தில் விருந்தினர்கள் கடவுளை போன்றவர்கள். உங்களை மதித்து, உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களை கோவா சர்வதேச - இந்திய திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவராக உங்களை அழைத்த இந்தியர்களை நீங்கள் மிகவும் மோசமாக அவமானப்படுத்தியுள்ளீர்கள்.

நான் திரைப்படத்துறை நிபுணர் அல்ல ஆனால், இந்தியாவில் திறந்த நிலை காயமாக உள்ள அதற்கு இன்னும் விலைகொடுத்துக்கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்வு குறித்து ஆழ்ந்து தெரிந்துகொள்ளாமல் பேசுவது சரியானதல்ல.

இந்தியா - இஸ்ரேல் மக்கள் இடையேயான நட்பு மிகவும் வலிமையானது. நீங்கள் ஏற்படுத்திய பாதிப்பிலும் நிலைத்து நிற்கும்.

ஒரு மனிதனாக நான் வெட்கப்படுவதாக உணர்கிறேன். இந்தியாவின் தாராள மனப்பான்மை மற்றும் நட்பிற்கு நாங்கள் திருப்பி செலுத்திய மோசமான நடத்தைக்காக இந்திய மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்' என்றார்.

மேலும் படிக்க... 'தி காஷ்மீர் பைல்ஸ்' கொச்சையான திரைப்படம் - சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர்


Next Story