சிறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை


சிறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை
x

கைதிகளுக்கு பிரியாணி உள்ளிட்டவை வெளியே இருந்து வந்தால் சிறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு உள்பட மாநிலத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் பிறந்தநாள் கொண்டாடுவது, வெளியில் இருந்து உணவுகளை வாங்கி சாப்பிடுவது மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது குறித்து புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் வெளியில் இருந்து பிரியாணி பொட்டலங்களை வரவழைத்து சாப்பிடுகிறார்கள், மதுஅருந்துகிறார்கள், போதைப்பொருட்கள் பயன்படுத்துகிறார்கள், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சிறைகளில் நடைபெறாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறைகளில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால், அதற்கு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளே முழு பொறுப்பு ஆவார்கள். கைதிகளுக்கு வெளியில் இருந்து ஏதேனும் கொண்டு வந்து சிறைக்குள் அதிகாரிகள், ஊழியர்கள் கொடுத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story