மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் - ஒருவர் கைது


மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் - ஒருவர் கைது
x
தினத்தந்தி 20 July 2023 5:25 AM GMT (Updated: 20 July 2023 5:29 AM GMT)

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து கற்பழித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது. வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மணிப்பூரில் 2 இளம் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்ட வழக்கில் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேராதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை நிர்வாணமாக ஒரு கும்பல் அழைத்துச்சென்ற நிலையில் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story