பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்குகாரில் ரூ.7½ லட்சம் போதைப்பொருள் கடத்தியவர் கைது


பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்குகாரில்  ரூ.7½ லட்சம் போதைப்பொருள் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 10 April 2023 6:00 AM GMT (Updated: 10 April 2023 6:01 AM GMT)

பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு காரில் கடத்திய ரூ.7½ லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு-

பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு காரில் கடத்திய ரூ.7½ லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசார் வாகன சோதனை

பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு காரில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மங்களூரு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி போலீஸ் கமிஷனர் ஹெக்டே தலைமையிலான போலீசார் மங்களூரு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் போதைப்பொருள் இருந்தது. இதுதொடர்பாக போலீசார் அந்த நபரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

ரூ.7½ லட்சம் போதைப்பொருள்

விசாரணையில், அவர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செர்கலையை சேர்ந்த அப்துல்லா (வயது 35) என்பதும், அவர் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு காரில் எம்.டி.எம்.ஏ. என்ற போதைபொருளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்துல்லாவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.7½ லட்சம் மதிப்பிலான 150 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருள் மற்றும் கார், செல்போன், ரூ.1,260 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்துல்லா மீது ஏற்கனவே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவிற்கு 45 கிலோ கஞ்சா கடத்தியதாக காசர்கோடு வித்யாநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story