200 'வந்தே பாரத்' ரெயில்கள் உற்பத்தி, பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை பெற 'பெல்' நிறுவனம் போட்டி


200 வந்தே பாரத் ரெயில்கள் உற்பத்தி, பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை பெற பெல் நிறுவனம் போட்டி
x

‘வந்தே பாரத்’ ரெயில்கள் உற்பத்தி, பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை பெற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ நிறுவனமும் போட்டியில் குதித்துள்ளது.

'வந்தே பாரத்' ரெயில்கள் என்னும் பெயரில் 4 ஆண்டுகள் கடின உழைப்பு மற்றும் திட்டமிடலுக்கு பிறகு அதிவேக ரெயில்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 2019-ம் ஆண்டு, 2 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சமீபத்தில், மேலும் 3 ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும், 102 வந்தே பாரத் ரெயில்களை வடிவமைக்க ரெயில்வே துறை 'ஆர்டர்' கொடுத்துள்ளது. இவை அனைத்தும் இருக்கை வசதி மட்டும் கொண்ட ெரயில்கள் ஆகும்.

இதற்கிடையே, தூங்கும் வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரெயில்களை வடிவமைக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அந்த ரெயில்களை 35 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணியை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது.

இதற்காக ரூ.58 ஆயிரம் கோடி டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது. ரெயில்கள் உற்பத்திக்கு ரூ.26 ஆயிரம் கோடியும், பராமரிப்புக்கு ரூ.32 ஆயிரம் கோடியும் வழங்கப்படும்.

இந்த டெண்டரை பெற 5 நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இவற்றில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'பெல்' நிறுவனமும் அடங்கும். டைடாகார் வேகன்ஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டாக 'பெல்' போட்டியில் குதித்துள்ளது.

பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷியா ஆகிய நாடுகளின் நிறுவனங்களும் போட்டியிடுகின்றன. 45 நாட்களில் டெண்டர் திறக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம், 24 மாதங்களுக்குள் தூங்கும் வசதி வந்தே பாரத் ரெயிலின் மாதிரியை தயாரித்து அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டின் முற்பகுதிக்குள், முதலாவது தூங்கும் வசதி வந்தே பாரத் ரெயிலை அறிமுகப்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது.


Next Story