மூன்றாவது குழந்தை குறித்த தகவலை மறைத்த பெண் மேயர் பதவியை இழந்தார்...!


மூன்றாவது குழந்தை குறித்த தகவலை மறைத்த பெண் மேயர் பதவியை இழந்தார்...!
x
தினத்தந்தி 29 July 2023 9:55 AM GMT (Updated: 29 July 2023 11:36 AM GMT)

பீகார் மாநில சாப்ரா நகர் மேயர் ராக்கி குப்தா மூன்றாவது குழந்தை குறித்த தகவலை மறைத்ததற்காக பதவியை இழந்தார்.

பாட்னா,

பீகார் மாநில சாப்ரா நகர் மேயராக இருந்தவர் ராக்கி குப்தா. இவர் முன்னாள் மாடல் அழகி ஆவார். இவர் தனது பிரபலத்தை வைத்து அரசியலுக்குள் நுழைந்து மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தல் சமயங்களில், போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறை. அந்தவகையில், ராக்கியும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அந்த பிரமாண பத்திரத்தில், தனக்கு 2 குழந்தைகள் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், ராக்கிக்கு உண்மையிலேயே 3 குழந்தைகள் இருக்கிறார்களாம். பொய் சொல்லி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

முனிசிபல் சட்டத்தின் விதிகளின்படி, வேட்பு மனு பரிசீலனையின்போது, 2 குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர், தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிடுவார். அந்தவகையில், 3 குழந்தைகள் தனக்கு இருந்தும், ஒரு குழந்தையை மறைத்துவிட்டார் ராக்கி. ஆனால், அவரது இந்த பிரமாண பத்திரம் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை.

இதற்கு பிறகுதான், ராக்கிக்கு 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. முதல் குழந்தை ஷரியன்ஸ் (வயது 14) 2வது குழந்தை ஷிவான்ஷி (வயது 9) 3வது குழந்தை ஷரிஷ் (வயது 6).

இந்த விஷயத்தை எதிர்க்கட்சியினர் மோப்பம் பிடித்து விவகாரத்தையும் கிளப்பி உள்ளார்கள். தேர்தல் ஆணையத்திற்கு ஆதாரத்துடன் புகார் அனுப்பினார்கள். எதிர்க்கட்சிகள் பிரச்சனையை பெரிதாக்கிய நிலையிலும் கூட, தனக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள் என்று வாதிட்டார் ராக்கி.

இதன் பிறகு, பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த குற்றச்சாட்டின் பேரில், ராக்கி மீது தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சரண் மாவட்ட நீதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில் பீகார் முனிசிபல் சட்டம் 2007-ன்பிரிவு 18(1)ன் கீழ் ராக்கி குப்தாவை மேயர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது ஆணையம். இப்போதைக்கு, ராக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டதால், மேயர் பதவி காலியாகி உள்ளது.


Next Story