'அவர்கள் பிராமணர்கள் நல்ல மதிப்பு கொண்டவர்கள்' - பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் குறித்து பாஜக எம்.எல்.ஏ. கருத்து


அவர்கள் பிராமணர்கள் நல்ல மதிப்பு கொண்டவர்கள் - பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் குறித்து பாஜக எம்.எல்.ஏ. கருத்து
x
தினத்தந்தி 19 Aug 2022 5:02 AM GMT (Updated: 19 Aug 2022 5:04 AM GMT)

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தின்போது 2022 பிப். 28-ம் தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தனது குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார்.

21 வயதான பில்கிஸ் பானு 5 மாதம் கர்ப்பினியாக இருந்தார். அவருக்கு 3 வயதில் பெண் குழந்தையும் இருந்தது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தனது குடும்ப உறுப்பினர்கள் 15 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டார்.

2002 மார்ச் 3-ம் தேதி பில்கிஸ் பானு தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஷபர்வாட் என்ற கிராமத்தை அடைந்த போது 20-30 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக்கொன்ற அந்த கும்பல் கர்ப்பினியான பில்கிஸ், அவரது தாயார், மேலும் 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் 8 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். 6 பேர் மாயமாகினர்.

17 பேரில் பில்கிஸ் பானும், ஒரு ஆண் நபர், 3 வயது குழந்தை மட்டுமே உயிர் பிழைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என 2008-ம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளான ரதீஷம் ஷா, ஜெஷ்வந்த் சதுர்பாய் நய், கேஷ்பாய் வேதன்யா, பகபாய் வேதன்யா, ராஜ்பாய் சோனி, ரமேஷ்பாய் சவுகான், ஷைலேஷ்பாய் பட், பிபின் சந்திர ஜோஷி, கோவிந்தபாய் நய், மிதீஷ் பட், பிரதீப் மோதியா ஆகிய 11 குற்றவாளிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில், கோத்ரா மாவட்ட கலெக்டர், மாவட்ட மாஜிஸ்திரேட், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சுமன்பென் சவுகான், ராவுல்ஜி உள்பட பலர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பரிந்துரை குழுவில் இடம்பெற்ற பாஜக எம்.எல்.ஏ. ராவுல்ஜி சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அவர்கள் (பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள்) குற்றம் செய்தார்களா? இல்லையா? என எனக்கு தெரியாது. ஆனால், குற்றம் செய்ய நோக்கம் இருந்துள்ளது.

அவர்கள் (குற்றவாளிகள்) பிராமணர்கள். பொதுவாக பிராமணர்கள் நன்மதிப்பு கொண்டவர்கள். அவர்களை தண்டிக்க வேண்டும் என யாரேனும் நினைக்கலாம். சிறையில் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது' என்றார்.

பாஜக எம்.எல்.ஏ.வின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story