பில்கிஸ் பானு வழக்கு: " பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடே பார்க்கிறது" - ராகுல் காந்தி


பில்கிஸ் பானு வழக்கு:  பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடே பார்க்கிறது - ராகுல் காந்தி
x

Image Courtesy:PTI

தினத்தந்தி 17 Aug 2022 7:25 AM GMT (Updated: 17 Aug 2022 7:29 AM GMT)

பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்றுமுன்தினம் விடுதலை செய்தது. இந்த நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இந்தியில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ' 5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியைக் கொன்றவர்கள் 'சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா' போது விடுவிக்கப்பட்டனர். 'பெண் சக்தி' பற்றி பொய் பேசுபவர்களால் நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது? பிரதமர் அவர்களே, உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த நாடும் பார்க்கிறது' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story