டெல்லி மாநகராட்சி தேர்தலில் சுகேஷ் சந்திரசேகர் ஆதரவுடன் பாஜக போட்டியிடுகிறது - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


டெல்லி மாநகராட்சி தேர்தலில் சுகேஷ் சந்திரசேகர் ஆதரவுடன் பாஜக போட்டியிடுகிறது - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
x

Image Courtesy: ANI

குஜராத் மற்றும் டெல்லி தேர்தல்களில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் ஆதரவுடன் பாஜக போட்டியிடுகிறது என ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லயில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "குஜராத் சட்டசபை தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல்கள் பா.ஜ.க.வை மிகுந்த அச்சத்துக்கு தள்ளி உள்ளது. எனவே அவர்கள் சுகேஷ் சந்திரசேகர் போன்ற ஏமாற்றும் நபர்களை நம்பியிருக்கிறார்கள்.

"சந்திரசேகர் பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகராக மாறிவிட்டார், அக்கட்சி (பா.ஜ.க.) ஒரு குண்டர் ஆதரவுடன் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதில் இருந்து பாஜக மிகவும் பதட்டமாக இருப்பதாகத் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சி மீது அவர்கள் அவதூறு பரப்புவது என்பது முற்றிலும் வெட்கக்கேடானது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு எழுதிய கடிதத்தில், சிறையில் பாதுகாப்பாக இருப்பதற்காக, 2019-ம் ஆண்டு, தன்னிடம் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடியும், சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ரூ.12 கோடியே 50 லட்சமும் பறித்துக்கொண்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story