இஸ்லாமிய மதத்தினரை பாஜக வெறுக்கிறது - ஓவைசி


இஸ்லாமிய மதத்தினரை பாஜக வெறுக்கிறது - ஓவைசி
x

இஸ்லாமிய மதத்தின் இறை தூதரையும், இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக வெறுப்பதாக அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. டி ராஜா. இவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கியை விமர்சித்தும், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்களை மேற்கொள்காட்டியும் பேசினார். அவர் பேசிய வீடியோ 'ஸ்ரீ ராம் சேனல் தெலுங்கானா' என்ற யூடியூப் சேனல் ஒன்றில் வெளியானது.

இதனை தொடர்ந்து இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகவும், டி ராஜா-வை கைது செய்ய வேண்டும் என இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜாவை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், டி.ராஜாவை கட்சியில் இருந்து பாஜக சஸ்பெண்ட் செய்தது. மேலும், இது தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் டி.ராஜாவுக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து பாஜக எம்.எல்.ஏ. டி ராஜா தெரிவித்த கருத்துக்கு அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ. கூறிய கருத்துக்களை நான் கண்டிக்கிறேன். ஐதராபாத்தில் அமைதி நிலவுவதை பாஜக விரும்பவில்லை. இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதரையும், இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக வெறுக்கிறது. இந்தியாவில் சமூக, சகோதரத்துவத்தை அழிக்க பாஜக நினைக்கிறது. எங்களுடன் அரசியல் ரீதியில் மோதுங்கள். ஆனால், இவ்வாறு மோதாதீர்கள். எம்.எல்.ஏ.வின் கருத்துக்களை ஆதரிக்கவில்லையென்றால் பிரதமர் மோடியும், பாஜகவும் எதிர்வினை ஆற்ற வேண்டும். சர் தங் சி ஜுடா (இஸ்லாமிய மத கடவுளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு ஒரே ஒரு தண்டனை தான் உள்ளது அது தலையை துண்டித்தல்) என்ற கோஷங்களையும் நான் கண்டிக்கிறேன். அவ்வாறு கோஷம் எழுப்புபவர்களுக்கு நான் கூறுவது சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்பது தான்' என்றார்.


Next Story