மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் பதவி ஏற்பு


மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 13 Dec 2023 6:07 AM GMT (Updated: 13 Dec 2023 7:56 AM GMT)

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போபாலில் திங்கட்கிழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக மத்திய பிரதேசத்தில் கடந்த 17-ந்தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 66 தொகுதிகள் கிடைத்தன.

புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ், அம்மாநில கவர்னர் மங்குபாய் படேலை சந்தித்து புதிய அரசை அமைக்க உரிமை கோரினார். அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து மோகன் யாதவ் மத்திய பிரதேச முதல்-மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றனர்.இதற்கான விழா போபாலில் உள்ள லால் பரேட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


Next Story