மும்பை மாநகராட்சியின் ஊழல் பானையை உடைப்போம்: துணை முதல் மந்திரி பட்னாவிஸ்


மும்பை மாநகராட்சியின் ஊழல் பானையை உடைப்போம்: துணை முதல் மந்திரி பட்னாவிஸ்
x

மும்பை மாநகராட்சியின் ஊழல் பானையை உடைப்போம் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை

மும்பையில் நேற்று 'தஹி ஹண்டி' என அழைக்கப்படும் உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. கோவிந்தாக்கள் வான் உயரத்திற்கு மனித பிரமீடு அமைத்து அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த தயிர் பானைகளை உடைத்தனர். இதில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒர்லி பகுதியில் மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் ஏற்பாடு செய்து இருந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி ஊழல் பானைகளை உடைக்க தொடங்கி உள்ளார். நாங்களும் மும்பை மாநகராட்சியின் ஊழல் பானையை உடைப்போம் என்றார்.

இதேபோல ஒர்லியில் நடந்த தஹி ஹண்டி விழாவில் ஆஷிஸ் செலார் பேசுகையில், " இந்து பண்டிகைகள் கொண்டாட அனைத்து கட்டுபாடுகளையும் நீக்கியதற்காக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும் நன்றி. ஒர்லியில் மட்டுமல்ல, மும்பையின் பல்வேறு பகுதிகளில் சிவசேனா, பா.ஜனதா ஆதரவால் தான் வெற்றி பெற்றது. இந்த முறை மும்பை மாநகராட்சியில் பா.ஜனதாவின் தாமரை மலரும் " என்றார்.

மும்பை மாநகராட்சி கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனா வசம் உள்ளது. தற்போது சிவசேனா மிகப்பெரிய பிளவை சந்தித்து இருப்பதால், சிவசேனாவிடம் இருந்து மும்பை மாநகராட்சியை வசப்படுத்த பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.


Next Story