நகைக்கடையில் புகுந்து ரூ.7 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு


நகைக்கடையில் புகுந்து ரூ.7 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு
x
தினத்தந்தி 9 Dec 2022 6:45 PM GMT (Updated: 9 Dec 2022 6:46 PM GMT)

தாவணகெரேயில் நகைக்கடையில் புகுந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இரும்பு ஷெட்டரை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காாட்டி உள்ளனர்.

சிக்கமகளூரு:

நகைக்கடை

தாவணகெேர டவுன் சோபாநகர் பகுதியை சேர்ந்தவர் பகவதி. இவர் அந்தப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் பகவதி, கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வழக்கம் போல நகைக்கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையின் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது.

ரூ.7 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு

இந்த நிலையில் இரவு நேரத்தில் யாரோ மர்மநபர்கள், நகைக்கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு போன தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இதுகுறித்து கே.டி.ஜே. நகர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு தடய அறிவியல் அதிகாரிகள் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்

இதையடுத்து போலீசார் நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் வெளியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாவணகெரே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார். மேலும் விசாரணை விவரங்களை அவர், போலீசாரிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதுகுறித்து கே.டி.ஜே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story