கர்நாடகாவில் லஞ்சம், ஊழல்; முதல்-மந்திரி பதவி விலக கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


கர்நாடகாவில் லஞ்சம், ஊழல்; முதல்-மந்திரி பதவி விலக கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

கர்நாடகாவில் ஊழல், லஞ்சம் பெருகி உள்ளது என கோஷம் எழுப்பி முதல்-மந்திரி பசவராஜ் பதவி விலக வலியுறுத்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பெங்களூரு,


கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வின் மகன் பிரசாந்த். டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர் ஒருவரிடம், அவருக்கே ஒப்பந்தம் கிடைக்க ஏதுவாக, ரூ.80 லட்சம் லஞ்சம் கேட்டு, அவற்றில் முதல் தவணையாக ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிரசாந்த் உள்பட 5 பேர் லோக் அயுக்தாவிடம் சிக்கினர்.

ரூ.40 லட்சம் லஞ்ச விவகாரம் என நினைத்து எம்.எல்.ஏ.வின் மகன் வீடு, அலுவலகத்தில் லோக் அயுக்தா போலீசார் நடத்திய சோதனையில், கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் சிக்கியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் கூறும்போது, பா.ஜ.க. ஆட்சியில் விதான சவுதா வியாபார சவுதாவாக மாறிவிட்டது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

நாங்கள் ஆதாரப்பூர்வமாக ஊழலை வெளிப்படுத்தினாலும், அதற்கு ஆதாரம் எங்கே என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரிகள் கேட்கிறார்கள். மடாதிபதி ஒருவரே மடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை விடுவிக்க 30 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.

இதுகுறித்து பசவராஜ் பொம்மை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், மந்திரியாக இருந்த ஈசுவரப்பாவின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைவிட வேறு ஆதாரங்கள் வேண்டுமா?. பா.ஜ.க. எம்.எல்.ஏ. கூளிஹட்டி சேகர், நீர்ப்பாசனத்துறையில் ரூ.22 ஆயிரம் கோடி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கடிதம் எழுதினார். ஊழலுக்கு இது ஆதாரம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

மந்திரிகள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

மைசூரு சாண்டல் சோப்பு தொழிற்சாலை வாரிய தலைவராக இருந்த மாடால் விருபாக்ஷப்பா அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். சோப்புக்கு தேவையான கச்சா பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி ஊழல் செய்துள்ளார் என்றும் பிரியங்க் கார்கே குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

எனினும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் ஊழல் விவகாரத்தை மூடிமறைக்க முயற்சி செய்ய மாட்டோம் என்றும், பாரபட்சமின்றி விசாரணை நடைபெறும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் திரண்ட காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமலிங்க ரெட்டி கூறும்போது, கர்நாடகா முழுவதும் ஊழல் மற்றும் லஞ்சம் பெருக்கெடுத்து காணப்படுகிறது.

ஆனால், அதற்கு சான்று எங்கே? என அரசு கேட்கிறது. அதனால், இந்த எம்.எல்.ஏ. மகன் விவகாரமே தற்போது அதற்கான சான்றாக உள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதவி விலக வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என கூறினார்.

காங்கிரசாரின் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.


Next Story