தடாகம் பள்ளத்தாக்கில் செங்கற்சூளைகள் - தடையை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவு


தடாகம் பள்ளத்தாக்கில் செங்கற்சூளைகள் - தடையை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவு
x

எந்த அனுமதியும் இன்றி செங்கற்சூளைகள் செயல்பட்டது சட்டவிரோதம் அல்லவா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னை,

யானைகள் வழித்தடம், யானைகள் வேட்டைத் தடுப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் கடந்த 10-ந்தேதி நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கற்சூளைகளை மூடும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அபராத தொகையில் 2 லட்ச ரூபாயை செலுத்திவிட்டு செங்கற்களை எடுத்துச் செல்லவும், செங்கற்சூளைகள் தொடர்ந்து செயல்படவும் சுரங்கத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தடாகம் பகுதியில் செங்கற்சூளைகள் தொடர்பாக ஐகோர்ட்டிலும், பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சுரங்கத்துறை ஆணையர் எப்படி இந்த உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் சுரங்கத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தடாகம் பகுதியில் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், அந்த பகுதியில் செங்கற்சூளைகள் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதன்படி இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தடாகம் பகுதியில் எந்த செங்கற்சூளையும் செயல்பட அனுமதி அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் அபராத தொகையை செலுத்தி செங்கற்களை எடுக்க அனுமதிக்க வேண்டும் என செங்கற்சூளைகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது எந்த அனுமதியும் இன்றி செங்கற்சூளைகள் செயல்பட்டது சட்டவிரோதம் அல்லவா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் செங்கற்சூளைகள் தொடர்பான வழக்கை விரைந்து முடிக்குமாறு பசுமை தீர்ப்பாயத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதுவரை அபராத தொகையை செலுத்திவிட்டு செங்கற்களை எடுக்க சுரங்கத்துறை அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.


Next Story