ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகளின் வீடுகளில் திருட்டு


ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகளின் வீடுகளில் திருட்டு
x
தினத்தந்தி 22 March 2023 6:45 AM GMT (Updated: 22 March 2023 6:46 AM GMT)

மூடபித்ரியில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகளின் வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா அலங்கார் கிராமத்தை சேர்ந்தவர் ரத்னாகர் ஜெயின். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் தீரேந்திர ஹெக்டே. இவர்கள் 2 பேரும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் ஆவர். இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் அருகில் உள்ள ஜெயின் கோவிலுக்கு சென்றனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் ரத்னாகர் ஜெயின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பீரோவை திறந்து, 25 பவுன் தங்கநகை, ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனர். இதே போல தீரேந்திர ஹெக்டே வீட்டின் பூட்டையும் உடைத்து 20 கிராம் தங்கநகை, ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் நகைகள் திருடுபோயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மூடபித்ரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை திருடி சென்றதாக தெரியவந்தது. இது குறித்து மூடபித்ரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Next Story